கூத்துப்பட்டறை

என் எண்ணங்களை கிறுக்கி உங்களையும் குழப்பவே கூத்தாடி என்ற நாமத்தோடு வந்திருக்கிறேன்.

கற்பு என்னும் மாயை

குஷ்பு விவகாரம் நாளிதழ்களிலும்,டி.விகளிலும் கலக்கிகொண்டு இருக்கிறது,ஆளாளுக்கு கற்பு பற்றியும் ,தமிழ் தாய்மார்களை அவமானபடுத்தியதாய் கூறப்பட்ட குஷ்புவின் கருத்து வெளியாகிய தமிழ் இந்தியா டூடே படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.ஆனால் கிடைக்கும் செய்திகளை வைத்துப் பார்க்கும் போது செக்ஸ் விழிப்புணர்வு பற்றிய சர்வேக்கு பதிலளிக்கையில் சொன்னக் கருத்துக்கள் தான் பிரச்சினைக்கு காரணம் எனத் தெரிகிறது.

விகடனிலிருந்து " பெண்கள் திருமணமாகும்ப் போது கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்பது போன்று எண்ணங்களில் இருந்து நமது சமுதாயம் விடுதலையடைய வேண்டும்.கல்வி பெற்ற எந்த ஆண்மகனும் தான் திருமணம் செய்யப் போகும் பெண் கன்னித்தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான. "

இந்த கருத்தில் எந்தத் தவறும் இருப்பதாக எனக்குப் படவில்லை.கற்பை கன்னித்தன்மையோடு மட்டும் பொருத்திப் பார்க்கும் சமூகத்தின் குறைபாட்டின்
வக்கிரப் பார்வைதான் குஷ்புவின் இந்த கருத்துக்கான எதிர்வினை.கற்பு என்னும் தமிழ் வார்த்தையின் சமமான வார்த்தையாக நான் பார்ப்பது fidelity யைத்தான்.
virginity யை அல்ல .பெண்களின் கன்னித்தன்மைப் பற்றி கவலைப் படும் சமூகம் ஆண்களுக்கான எந்த வரையறைகளையும் வைப்பதில்லை. இந்த தமிழ் கலாச்சார அரசியலில் பெண்ணியம் பேசும் எவரும் குஷ்புவுக்கு பரிந்து வராதது என்ன அரசியலோ.

ஆண்வழிச் சமூகத்தின் அவலங்களில் இந்த கற்பு நடுத்தர மக்களால் தாண்ட முடியாத லட்சுமணக் கோடு.கொடுமை என்ன வென்றால் ,இதை உயர்த்திப்
பிடிக்கும் ஆண்களில் முக்கால்வேசிப் பேர் கற்பு என்பது ஆண்களுக்கும் உண்டு என்ற கருத்தாக்கத்தை மதிப்பவர்கள் அல்ல.

பெண்ணியம் பேசும் பிரபலங்களின் மவுனம் ஆச்சரியப்படவைக்கிறது. நியாத்தில் அவர்கள் குஷ்புவுக்கு பரிந்து வர வேண்டும்.அவர்களின் மவுனம் அரசியல் அல்லது கோழைத்தனம்.

உணர்ச்சிகள் ஆண்களுக்கும்,பெண்களுக்கும் பொது தானே .அதில் ஒருவர் மட்டும் அடக்கி வைத்துக் கொண்டு தமிழ் காலாச்சாரத்தை காக்க வேண்டும் என
நினைப்பது முட்டாள்தனம்.இன்று கல்யாண வயது பொருளாதார காரணங்களால் தள்ளிப் போகும் போது ,சினிமா ,டி.வி க்களில் காணும் விரசம் தூண்டும் காட்சிகளைப் பார்த்துக் கொண்டு கன்னிமையை தக்க வைத்துக் கொள்வது கடினம் தான்.பெரு நகரங்களில் disco கலாச்சாரத் தில் கற்பு எனும் மாயை விரைவில் தகர்ந்து விடும் .அதுவே சிறு நகரங்களின் அருகில் இருக்கும் அருவிகளிலும் ,பூங்காகளிலும் கொஞ்சம் தொலைந்து கொண்டுத்தான் இருக்கிறது.

இராம தாஸ்,திருமா விடம் இருந்து இதைவிட எதுவும் எதிர் பார்க்க முடியாது.தங்கர் விவகாரத்தில் குஷ்பு மேல் கடுப்பில் இருந்த அவர்களுக்கு நல்ல வாய்ப்பு.ஆனால் தங்கர் விவகாரம் இல்லாதிருந்தாலும் இதைத்தான் அவர்களிடம் இருந்து எதிர் பார்க்க முடியும் ,அவர்களின் முற்ப்போக்கு சிந்தனை ஆண்களுக்கு மட்டுமே. "அடக்கி வைக்கப் பட்ட பால் உணர்ச்சி தான் உலகின் அனைத்து வன்முறைக்கும் காரணம்" என்ற (யார் சொன்னது ,மறந்து விட்டது ) கருத்து இவர்களின் வன்முறை போரட்டத்துக்கும் பொருந்துமோ?

தமிழ் கலாச்சாரத்தின் காவலர்களாக காட்டிக் கொள்ளும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் ,தயைக் கூர்ந்து தமிழ் கலாச்சாரத்தை "தொடைகளுக்கு நடுவில்
சுருக்கி விடாதீர்கள் " .

Labels:

கருப்பு M.G.R

அரசியல் கட்சிகளுக்கு பஞ்சமில்லாத தமிழ்நாட்டில் இன்னும் ஒரு நடிகரின் புதிய கட்சி மதுரையில் தொடங்கபட்டுள்ளது.கழகங்களின்வரிசையில் புதியதாய் ஒன்றுக்கான தேவை இல்லாத நிலையில் தனிமனித ஆசையைத் தவிர வேறு ஏதும் புரட்சி இருப்பதாக தெரியவில்லை.விஜயகாந்த் திட்டமில்லாமல் T.R போல் உணர்ச்சி வேகத்தில் எதையும் செய்பவர் அல்ல என்பது அவரின் நடவடிக்கைகளை கவனித்து வருபவர்களுக்குத் தெரியும். அவரின் இந்த கட்சி தொடங்கலுக்கு காரணம் "ஒரு நடிகரின் முதல்வர் கனவு",கனவு காண்பதை குறைசொல்லமுடியாது ,அதுவும் தங்கத் தமிழ் நாட்டில் !!

என்னுடைய பார்வையில் அவரின் அரசியல் ஆசைக்கு அவரின் M.G.R கனவும்,சோ ,சங்கராச்சாரியார்,பண்டுருட்டி போன்றோரின் பின்புலவுமே இவ்வுளவு சீக்கிரம் அவரை கட்சித் தொடங்க வைத்துருக்கிறது.
கருணாநிதியின் வயதும்,அவருக்கு பின் திமுக வில் வரும்வெற்றிடத்தை ஸ்டாலினால் நிரப்ப முடியாததால் சிதறும் திமுக அநுதாபிகளின் வோட்டுக்களை கவரும் உத்தியும் இருக்கிறது(வை.கோ வும் இதற்காகத் தான் காத்துருக்கிறார்). அதைத்தவிர கொள்கை எல்லாம் சும்மா , கறுப்பு எம்.ஜி.யா ரின் பேட்டிகளிலோ,மாநாட்டு பேச்சிலோ எந்த ஒரு முதிர்ச்சியையோ,செயல் திட்டமோ,அரசியல்பார்வையையோ பார்க்க முடியவில்லை,சினிமா டயலாக் பேசியது மாதிரித்தான் இருந்தது ,அதுவும் சங்கர் சினிமா ஏகப்பட்ட ஜிகினாக்களுடனும்,பிரச்சினைக்களுக்கு தீர்வான அலாவுதீன் பூதத்தை கொண்டுள்ள ஹீரோ.ஒரு திட்டம் ஒன்னு வச்சிருக்கேன்னு பாட்டு வேற ..நல்ல செட்டு போட்டு எடுக்கப் பட்ட சினிமா நல்லாத்தான் இருந்தது.

தங்கக் கீரிடம் ,வெள்ளி செங்கோல் போன்றவை கழக காலச்சாரத்தின் நகல்கள்.பாவம் அவரே M.G.R யின் நகலாகத் தானே இருக்கப்பார்க்கிறார்.அலங்கரிக்கப் பட்ட நாற்காலியை அகற்றி சாதாரண நாற்காலிக்கு தொண்டர்கள் முன் மாற்றுவது cheap ஆக செய்யப்பட்ட கொரியோகிராபி.குடும்ப அரசியலை விமர்சித்த அவரின் எந்த செயல்பாடுகளும் அதை வலியுறுத்துவதாய் தெரியவில்லை. வாழ்க அண்ணி ,வாழ்க மச்சான்..அண்ணனைப்பிடிப்பதற்கு இவர்கள் உதவுவார்கள்.

சோ ரஜினியை அரசியலுக்கு இழுக்க முயற்சி நடக்காததால் ,கறுப்பு M.G.R யை தூண்டிவிடுகிறார்,ஜெயிலாச்சாரியாரின் பங்கும் நிறையவே இருப்பதாகசொல்லப்படுவது பி.ஜெ.பி யின் ஆசை வார்த்தைகளில் தெரிகிறது.குமுதம் தனது கருத்துக் கணிப்பில் 8 % ஆதரவு இருப்பதாக சொல்வது எவ்வுளவு தூரம்உண்மை ,ஆதரவை வோட்டுக்களாக மாற்றும் வித்தை அவர் ரசிகமணிகளுக்கு தெரிCயுமா என்பதல்லாம் இனிமேல் வரும் தேர்தலில் தெரியும்.அதுவரை பத்திரிகைகளின் அட்டைப்பட் நாயகனாக தொடருவார் ..ஞாபகம் இருக்கிறதா வை.கோ,ரஜினி மற்றும் ஜெயல்ட்சுமி,செரீனாக்களும்இப்படித்தான் அட்டைப்படங்களில் ஜொலித்தார்கள்.பாவம் அவர்களுக்கும் தொழில் நடக்க வேண்டாமா .

இன்றைய பார்வையில் விஜயகாந்த் எந்த சில திமுக,வைகோ வின் தெலுங்கு பேசும் ஓட்டுக்களை பிரிப்பதை தவிர வேறு எதுவும் செய்யமுடியுமா என்பது சந்தேகமே.ஆனால் வரும் காலங்களின் அவரின் செயல்பாடுகள் வெகுஜன சக்தியாக மாறமுடியும் அதற்கு சில நிகழ்வுகள் முக்கியம் ,அதில் முதலாவது கருணாநிதி இல்லாமையின்வெற்றிடம் ,அதைப் பற்றிய எதேனும் கணிப்புகள் கூட அவரிடம் இருக்கக்கூடும் (ஆஸ்தான ஜோஸ்யர் யாரோ ! ) .ஜெ யை எதிர்த்து அவர் அரசியல் பண்ண முடியுமாஎன்பதற்கான பதில் வரும் மாதங்களில் தெரியும்.அதுவரை அவருக்கு நம் தேனிலவு வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

Labels: